வடக்கில் தோற்றம் பெற்ற தமிழ் ராஜபக்சர்க்கள் ; தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து வெளியான கவலை
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்ஷக்களை கண்டோம். தமிழ் ராஜபக்ஷக்கள் தோற்றம் பெறுவார்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது ஆரம்பத்தின் முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம். நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோமென அமைச்சர் தெரிவித்தார்.
சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும். புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். மக்கள் எதிர்பார்த்த அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்குவோம் எனவும் தெரிவித்தார்.
அந்த கலந்துரையாடலின் ஒருசில விடயங்கள் வருமாறு, பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துகிறோம். பாராளுமன்றத்தை கூத்து கூடமாக்க இடமளிக்க முடியாது. பாராளுமன்றத்தை நாங்கள் நிர்வகிக்கிறோம்.புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள் கஞ்சா போதைப்பொருளை பாவித்தார்கள்.
குழுவாக ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவித்தார்கள். நான் நேரடியாக பார்த்துள்ளேன்.ராஜபக்ஷக்களின் காலத்தில் தான் பாராளுமன்றம் மிகமோசமாக பாதிக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
சிறந்த கலாசாரம் மோசமான கலாச்சாரத்தை முடக்கும் போது மோசமான கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இதனை நாங்கள் கட்டுப்படுத்துவார்கள்.
எனக்கு என்ன பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பாராளுமன்றத்தை கூத்து கூடாரமாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என்றார்.