தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்; விசாரிக்க குழு நியமனம்
அநுராதபுரம் மற்றும் வெலிகட ஆகிய சிறைச்சாலைகளில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் குறித்து விசாரிக்க குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமிக்க நீதி அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து , லொஹான் ரத்வத்த கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.