தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை; முன்னாள் ஜனாதிபதியின் உருக்கமான பதிவு!
தன்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான இருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
முகநூல் பதிவு
என்னை கொலை செய்ய முற்பட்ட சந்தேகநபருக்கு, கொட்டாஞ்சேனை ஆலய பூசகர் ஒருவரும் அவரது மனைவியும் உதவியதாக கூறப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் அவர்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர்.
அவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக என்னுடைய கண் எனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டப் போவதுமில்லை. விடுதலை செய்வது தொடர்பான நிலைப்பாடு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் கடந்த போதே அப்போதைய ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு கோருவதற்கு எண்ணியிருந்தேன்.
இந்நிலையிலேயே அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த தீர்மானம் தொடர்பில் தெரிவித்தார்.
அவர் என்னிடம் கேட்ட அந்த சந்தர்ப்பத்திலேயே நான் சரி என்று பதிலளித்தேன். அதோடு அந்த தீர்மானத்தை நான் விரும்புவதாகவும் அவரிடம் தெரிவித்தேன்.
அவர்களுக்கு புனர்வாழ்வளித்தேனும், அவர்கள் செய்த செயல் தவறு என்பதை உணர்த்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
என் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சில தினங்களின் பின்னர் உரையாற்றும் போதும், பதவிப் பிரமாண உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த இளைஞர், யுவதிகளை எம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்தேன் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.