கொரோனா தொற்றுடன் சபையை சுற்றிய தமிழ் எம்.பி!
கொரோனா தொற்றுக்குள்ளான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்துக்கு சமுகமளித்திருந்ததாகவும் அங்குள்ள சில இடங்களுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்ற சி.சி.டி.வி காட்சிகள் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், அவர் முகக்கவசம் அணிந்து சரியான சுகாதார சட்டங்களை பின்பற்றியதால், நாடாளுமன்றத்துக்கு அவர் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக தெரியவில்லை என்றும் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
அதோடு நாடாளுமன்றத்தில் இருந்த நேரத்தில் ஒரு சில தமிழ் எம்.பி.க்களுடன் மட்டுமே தொடர்பு வைத்திருந்ததாக பாராளுமன்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு , கொரோனா தொற்று இருப்பது கடந்த 24 ஆம் திகதி கண்டறியப்பட்டது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , 2 தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.