ஐநா தடை பட்டியலில் இருந்து தலிபான்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்பு!
ஐநா தடை பட்டியலிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
தலிபான்- அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தடையிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.
தலிபான்- அமெரிக்கா இடையே நடந்த ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறுவது என்றும் அல் கொய்தா அமைப்புடனான தொடர்பை தலிபான்கள் துண்டிக்க வேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐநா பொருளாதார தடை விதிக்கும் கமிட்டியை உருவாக்கியது. இந்த கமிட்டியில் ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கா, ரிபப்ளிக் டெமோகிராடிக் ஆப் தி காங்கோ, டெமாகிரேட்டிக் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆப் கொரியா, ஈரான், ஐஎஸ்ஐஎல், அல்கொய்தா, லிபியா, மாலி, சோமாலியா, சூடன், யேமன் ஆகிய நாடுகள் தடை பட்டியலில் உள்ளன.
தடை செய்யப்பட்ட இந்த நாடுகளுடன் மற்ற நாடுகள் பண பரிமாற்றமோ வணிகமோ செய்யக் கூடாது. அது போல் இந்த நாட்டில் உள்ளவர்கள் மற்ற நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1988 ஆவது தீர்மானத்தின் தடை பட்டியலில் தலிபான்களும் இடம்பெற்றுள்ளனர். தலிபான்களின் தலைவர் அப்துல் கானி பராதர், சிராஜூதீன் ஹக்கானி உள்பட 135 தலைவர்களும் இந்த தடை பட்டியலில் உள்ளனர்.
அல்கொய்தா தீவிரவாதிகளின் கை ஓங்கியதால் அவர்கள் மீது 1267 ஆவது தீர்மானத்தின்படி தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தலிபான்களின் அட்டூழியத்தால் ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் வெடித்தது.
இந்த நிலையில் தலிபான்- அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐநா தடை பட்டியலிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.