தாய்க்கு தாஜ்மஹால்; அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த மகனின் செயல்
திருவாரூரில் உயிரிழந்த தாய்க்காக ரூ.5 கோடி மதிப்பில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் ஒன்றை கட்டிய மகனின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அப்துல் காதர், ஜெய்லானி பீவி என்ற தமபதியினருக்கு நான்கு மகள் ஒரு மகன் உள்ளனர்.
இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்கு பதினொரு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இறந்த தனது தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
தாய்க்கு கட்டப்பட்ட நினைவு இல்லம்
அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு அம்மாவிற்கான நினைவுச் சின்னத்தை தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இங்கு உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லத்தை கட்டியுள்ளனர்.
இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த ஜூன் இரண்டாம் திகதி செய்யப்பட்டு பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தை எம் மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். ஐந்து வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசை தோறும் ஆயிரம் நபர்களுக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார்.
அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தை நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து தினந்தோறும் பார்த்து செல்வதாக கூறப்படுகின்றது.