பிரபல தொழிலதிபர் தினேஸ் சாப்டர் கொலை வழக்கில் வலுக்கும் சந்தேகம்!
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளரான தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 75 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 8 நாட்களை கடந்துள்ள போதிலும் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டவில்லை.
இந்த நிலையில், காவல்துறையும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
இதற்கமைய, தொழிலதிபர் தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றப்புலனாய் திணைக்களத்தினர் 58 பேரிடமும், பொரளை காவல்துறையினர் 17 பேரிடமும் இதுவரை வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட தினேஸ் சாப்டர் பொரளை பொது மயானத்திற்கு செல்வதற்கு முன்னர், அவர் சென்ற சிற்றுண்டிச்சாலை, வழமையாக செல்லும் சிற்றுண்டிச்சாலை அல்லவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தநிலையில் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றது, தினேஷ் ஷாஃப்டரா? அல்லது வேறு நபரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு சிசிரிவி கமராக்கள் இன்மை விசாரணைக்கு தடையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சிற்றுண்டிகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டையை அவர் பயன்படுத்தினாரா என்பது தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.