துபாயில் தலைமறைவான குற்றவாளிக்கு இலங்கையில் ஆதரவு ; முக்கிய சந்தேகநபர் கைது
துபாயில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவர்களின் போதைப்பொருள் வியாபாரத்தை இலங்கையில் முன்னெடுத்து வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
‘கொண்ட ரஞ்சித்’ எனப்படும் துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகாவான ‘ஹைடொப் துஷார’ என்பவருக்காக இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்த ‘மாரவில அகில’ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க வீரசிங்கவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தும்மலதெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இடம்பெற்ற சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 120 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 53 கிராம் 610 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 75 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ காவல் நிலையம்க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து விசாரணைகள் தொடரப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.