சுமந்திரன் இப்பொழுதே பதவிவிலகி சென்றால் கடவுள் மன்னிப்பார்
சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் மாறாக தமிழர் தரப்பை அழிக்கவே அவர் முற்படுவதாகவும் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர , OMPஇடத்தில் அல்ல என வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இதன்போது மேலும் கூறிய அவர்கள், முதலில், சுமந்திரன் மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் உறுப்பினராக்க வேண்டும். அதன்பின்னர் போர்க்குற்றம் செய்ததாக நினைக்கும் எவர் மீதும் சுமந்திரன் வழக்கு பதிவு செய்யலாம் .
ரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திட்ட பிறகு, எங்கள் 146,000 தமிழர்களைக் கொன்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு நாம் தயாராகலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் , 90,000 விதவைகளையும் , 50,000 ஆதரவற்றோர் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை காணாமல் செய்தவர்களுக்கும் வழக்கை நாங்கள் தாக்கல் செய்வோம். தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார்.
நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுவதுடன் அனைத்து தரப்பினரையும் விசாரனைக்கு கொண்டு வருவதன் மூலம்,சுமந்திரன் தனது வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார். இந்நிலையில் சுமந்திரன் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம் சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர், இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
எனவே, நாங்கள் இந்தவிடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்பதுடன், ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோர உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.
நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . அதோடு சுமந்திரன் தமிழர்களின் எதிரிகள் போல் செயல்படுவதாக தெரிவித்த அவர்கள், உங்கள் நிலுவையில் உள்ள ராஜினாமா கடிதத்தை முடித்து, எங்களை தனியாக விட்டுவிடுமாறு கேட்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் சுமந்திரன் இப்பொழுது வெளியேறினால், அவர் தங்களுக்கு செய்த தீங்குகளை கடவுள் மன்னிப்பார் என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.