தமிழர் பகுதியில் பேருந்தில் பயணித்த முதியவருக்கு இப்படி ஒரு அவலநிலை!
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை அங்கிருத்தவர்கள் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
வவுனியா மெனிக்பாம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர், மன்னார் எழுத்தூர் பகுதியில் வசிக்கும் அவருடைய மகளிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு கொழும்பு பேருந்து மூலம் வவுனியாவுக்கு செல்வதற்காக மன்னாரிலிருந்து குறித்த பேருந்தில் பயணித்துள்ளார்.
குறித்த பேருந்தில் திருகோணமலையைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும் முதியவரின் அருகிலிருந்து பயணித்துள்ளார். அவர்கள் பயணித்த பேருந்து நானாட்டான் பிரதேச பஸ் தரிப்பு நிலையத்தை சென்றடைந்து பயணிகளை ஏற்றுவதற்காக தரிப்பிடத்தில் நின்றபோது, முதியவர் வைத்திருந்த பணத்தை 22 வயதான இளைஞர் பறித்துக் கொண்டு பஸ்ஸில் இருந்து பாய்ந்து ஓடியுள்ளார்.
முதியவரின் கூச்சலை கண்ட அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் திருடனை துரத்தி சென்று பணத்தோடு மடக்கி பிடித்தனர். சம்பவம் தொடர்பில் உடனடியாக முருங்கன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முருங்கன் பொலிஸாரிடம் பணத்தை திருடிய இளைஞரை இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து இளைஞரையும், முதியவரையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.