ஸ்தம்பித்து போன மன்னார் ; ஓரணியில் திரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள்
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் மன்னாரில் திங்கட்கிழமை (29) அன்று பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்ற நிலையில், மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து மன்னார் மாவட்டம் முழுவதும் திங்கட்கிழமை (29) அன்று பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
பதற்ற நிலை
மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களைக் கண்டித்துக் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமானது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.பின்னர் தொடர்ச்சியாக முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கதைத்து அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர்.
குறித்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.