சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுவதா? வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு கடிதம்!
யாழில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கண்டனக்கள் வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற மாணவர்கள், அதற்கு அனுமதித்த அதிபர், ஆசிரியர்கள் யார் என்பதை விசாரணை செய்து அறிக்கை தருமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
இது தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் , தனிப்பட்ட நபரின் நிகழ்வில் மாணவர்கள் பங்குபற்றியமை தொடர்பாக...
அண்மையில் கோவில் வீதியிலுள்ள இராசம்மாள் மண்டபத்தில் டில்லு என்ற பட்டப்பெயரை உடையவரால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் பாடசாலை சீருடையில் மாணவர்கள் பங்குபற்றிய காணொளியொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லு எனப்படும் நபர் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபர் என அனைவராலும் அறியப்படும் நபராவார். மேற்படி காணொளியில் மாணவர்கள் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவதும் பின்னால் உள்ள பதாகையில் (Dillu-Mafia King) என எழுதப்பட்டிருப்பதும் அவதானிக்கப்படக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பான காணொளியில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை இனங்காண்பதற்குரிய முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.
