யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்ட மக்கள் கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குப்பையை கொட்டுவதற்கு தமது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அரியாலை கிழக்கு பகுதியில்இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
விதியை மறித்ததால் போக்குவரத்தும் தடை
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வரவேண்டும் என கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் , விதியை வழி மறித்ததால் அப் பகுதியூடாக போக்குவரத்தும் தடைப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த போது மக்கள் தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் குறித்த பகுதிக்கு இனிமேல் குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
என எச்சரிக்கை விடுத்தனர். இதன்போது தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுநர் செயலகத்திலும் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,
உலகமெங்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலையூர் மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளை காப்பாற்றுவதற்காக போராடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நல்லூர் பிரதேச சபை, எமது ஊர் மக்களுடன் எந்த வகையிலும் கலந்து பேசாமல், சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை எமது ஊருக்குக் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது இது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்தளமாக எந்த வகையிலும் வகைப்படுத்தப்படாத - மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிடவேண்டும் என்றனர்.