பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை
பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் 'தெஹிவளை சாண்டோ' என்பவரால், 'கொஸ்மல்லி' என்பவரின் காசாளரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காசாளரின் தந்தைக்கு துப்பாக்கிச் சூடு
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு தவறியதால், குறித்த காசாளரின் தந்தைக்கு துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சுனில் பெர்னாண்டோ எனப்படும் 74 வயதுடைய முதியவராவார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், கைத்துப்பாக்கி மூலம் இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் விசேட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.