திருட்டுப் போன சொகுசு வேன் மீட்பு
வென்னப்புவ, உல்ஹிடியாவ பகுதியில் ஒரு வீட்டு காவலாளியை கொன்றுவிட்டு அந்த வீட்டிலிருந்து, திருடிய சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வேன், கண்டியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கைப்பற்றப்பட்டது.
காவலாளியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கண்டி பொலிஸ் நிலையத்திற்கருகிலுள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலைக்கு முன் வேனை நிறுத்திவிட்டு,
பின்னர் கண்டி குட்ஷெட் பஸ் நிலையத்திற்குச் செல்லும் குறுக்கு வீதி வழியாகச் சென்று, பின்னர் மோட்டார் சைக்கிளில் வேனை நெருங்கிச் சென்று, அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறும் காட்சி சி.சி.ரி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் கடந்த 13ம் திகதி வென்னப்புவ, உல்ஹிடியாவ பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து, காவலாளியைக் கட்டி வைத்து, அவரைக் கொன்று, பின்னர் வேனை கடத்தி சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் இத்தாலியில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் எனவும் கண்டி பொலிஸ் நிலையத்திற்கருகில் கைவிடப்பட்ட வேனில் சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைவிடப்பட்ட வேனில் இருந்து பல கத்திகளையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழு சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.