வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; ஆராய சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி!
புத்தளம் ஜயபிம பகுதியில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம் வீசிய நிலையில், அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த பிரதேச மக்கள் அது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் சோதனை செய்தபோது அழுகிய நிலையில் பெண்ணொருவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் மாதம்பை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மனைவியாக இருக்கலாமென புத்தளம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதோடு உயிரிழந்த பெண் மூன்று வாரங்களுக்கு முன்னர் குறித்த வீட்டிற்கு வாடகைக்கு வந்ததாகவும், அவர் நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம் இக்பால், சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை நடத்தினார். அத்துடன், பெண்ணுடன் தொடர்பிலிருந்தவரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் புத்தளம் பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

