50 வீடுகளை முட்டித்தள்ளிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்; கண்டுகொள்ளாத அரசாங்கம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 303 ரக விமானம் தாழ்வாக பறந்தமையினால் ஏற்பட்ட காற்றில் கட்டான பிரதேசத்தில் சுமார் 50 வீடுகள் சேதமடைந்தன.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் சம்பவம் இடம்பெற்று 3 மாதங்கள் கடந்துள்ள போதிலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மௌனப் போராட்டம்
சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த விமானத்தினாலேயே மக்களின் வீடுகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைந்த பிரதேசவாசிகள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்து நட்டஈடு வழங்குமாறு கோரி கட்டுநாயக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு முன்பாக நேற்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,
"காலநிலை காரணமாக இது நடந்தது என்று கடிதம் அனுப்புகிறார்கள். அப்போது எங்கள் பகுதியில் காற்று இல்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகிறது. காத்திருக்க நேரமில்லை. நாங்கள் ஏழைகள். எங்களுக்கு இழப்பீடு வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.