ஆசிரியர் திட்டியதால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவன் ; இலங்கையில் பகீர் சம்பவம்
பாணந்துறையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் ஆசிரியர் கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த மாணவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மாணவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை, கெஸ்பேவ, கோனா மடித்த வீதியைச் சேர்ந்த 14 வயதான மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.

புத்தகத்தில் எழுதியிருந்த தகாத வார்த்தை
நேற்று பாடசாலையில் மாணவர்களின் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதன்போது கண்காட்சி குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த மாணவன் அந்த புத்தகத்தில் எழுதியிருந்த தகாத வார்த்தைகளை ஆசிரியர் ஒருவர் கவனித்துள்ளார். கடுமையான வார்த்தையை எழுதியதற்காக ஆசிரியர் மாணவரை எச்சரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனமுடைந்த மாணவன் மூன்றாவது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்று, Live or Die என ஒரு புத்தகத்தில் எழுதி, “சேர், இதில் நான் என்ன செய்ய வேண்டும்?” என வினவியபோது Live என ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் மாணவன் திடீரென நாற்காலியில் இருந்து எழுந்து ஓடி 3வது மாடியில் இருந்து குதித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை மாணவனின் தாயாரும் பல ஆண்டுகளாக அதே பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியை என குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்த மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நோயாளர் காவுவண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
மாணவனின் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.