கனடா செல்லும் ஆசை ; போராட்டத்தை கைவிட்ட இலங்கையர்கள்!
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்டு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மங்களூரில் தடுத்து வைப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதற்காக இந்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.