ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற இலங்கையர்களை அனுப்பியவர்களுக்கு நேர்ந்த கதி!
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று (30-05-2024) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரஷ்ய இராணுவத்தில் சிவில் சேவைக்காக இலங்கையர்களை அனுப்புவதாக தலா 15 இலட்சம் ரூபா அறவீடு செய்ததாக 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன் அடிப்படையில் 2 சந்தேக நபர்களும் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை சுமார் 1 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.