வெளிநாடொன்றில் இலங்கையர்களால் நடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ; பொலிஸாரின் பிடிக்குள் மூவர்
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போது, 03 இலங்கையர்கள் உட்பட மொத்தம் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குவைத் பிரஜை, ஒருவர் இந்தியர், 03 பேர் இலங்கையர்கள் மற்றும் குடியுரிமையற்ற இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் விசாரணைக்கு உதவும் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
குவைத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை ஒழிக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.