தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பெண்!
இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை இலங்கை தமிழர் மறுவாழ்வு என மாற்றியிருக்கும் தமிழக முதல்வரின் செயல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
வேலூர் மேல்மொணவூர் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமையில் இருக்கும் இலங்கையர்களுக்கு வீடுகளை அமைக்கும் ஆரம்ப நிகழ்வுக்காக இன்று (02) செவ்வாய்கிழமை சென்ற போது லூட்ஸ் மேரி என்ற பெண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு (M.K.Stalin) நன்றி தெரிவிக்கும் போது இதனை கூறினார்.
கடந்த 31 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம். நீண்டகாலமாக எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. சொந்த வீடு என்பது எங்களுக்கு பெரும் கனவாக உள்ளது. சரியான வீடு வசதி இல்லாததால் தூங்க முடியாமல் தவிக்கிறோம். 4 அல்லது 5 பேர் உள்ள குடும்பங்களில் படுக்க கூட இடமில்லை.
சமையல் எரிவாயு இணைப்பு இல்லாததால் விறகு அடுப்பில் சமையல் செய்து பெண்கள் தவிக்கிறார்கள். எங்களுக்கு வீடு, கேஸ் வசதி போன்றவை கிடைக்க உள்ளது. வீடு கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) நான் உங்களில் ஒருவர் என கூறியது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் பாதியில் படிப்பை நிறுத்தியவள். வசதி இல்லாததால் பலர் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
அரசாங்கத்திடம் தற்போது நிதி அதிகமாக உள்ளதால் கல்வி செலவை அரசே ஏற்கும் என்பதால் இலங்கைத் தமிழர்கள் பலர் படிக்க முடியும். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறியிருக்கிறார்கள். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை மாற்றியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என குறித்த பெண் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முகாமைகளில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக 142.16 கோடி இந்திய ரூபா செலவில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (.M.K.Stalin) இன்று (02) வேலூர் மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். மேலும் 30 கோடி இந்திய ரூபா மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் 106 முகாமைகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதாக இதன்போது முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.