சீனாவில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு
சீனப் பயணிகளைக் கவரும் நோக்கில், பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் அதிநவீன 'ஹோலோகிராபிக்' (Holographic) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் தனித்துவமான சுற்றுலா அம்சங்களை புதுமையான முறையிலும், ஈர்க்கக்கூடிய வகையிலும் காட்சிப்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

பீஜிங்கில் மிகவும் பிரபல்யமான 'ரிட்டன்' பூங்காவிற்கு (Ritan Park) மிக அருகாமையில் இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளதால், அந்தப் பாதையினூடாகச் செல்லும் பெருமளவிலான மக்கள் இந்த முப்பரிமாணக் காட்சிகளை மிக இலகுவாகக் கண்டு ரசிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஹோலோகிராபிக் காட்சியமைப்பானது இலங்கையின் சுற்றுலாத்துறையை எட்டு முக்கிய தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி வழங்குகிறது.
அதன்படி, பேரின்பம் (Bliss), சாரம் (Essence), திருவிழாக்கள் (Festive), பாரம்பரியம் (Heritage), வனவிலங்குகள் (Wild), தூய்மை (Pristine), இயற்கை எழில் (Scenic) மற்றும் சாகசம் (Thrills) ஆகிய கருப்பொருள்களில் இலங்கையின் வனப்பு தத்ரூபமாகச் சித்தரிக்கப்படுகிறது.
இக்காட்சிகள் பார்வையாளர்களுக்கு இலங்கையைப் பற்றிய ஒரு ஆச்சரியத்தையும், அந்நாட்டிற்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற பேரார்வத்தையும் தூண்டும் வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன முயற்சியின் மூலம் சீனப் பயணிகளுக்கு இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாத் தலங்கள் குறித்து ஓர் ஆழமான புரிதலை ஏற்படுத்த முடியும் எனத் தூதரகம் நம்புகிறது.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தரும் சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு, வருங்காலத்தில் சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.