வங்கிக் கணக்கு விற்பனை ; வெளிநாடொன்றில் இலங்கை மாணவிக்கு சிறை தண்டனை
22 வயதுடைய இலங்கை மாணவி ஒருவருக்கு தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்ததற்காக சிங்கப்பூரில் புதன்கிழமை (01) மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்காக அவருக்கு 1,100 சிங்கப்பூர் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால், அவர் மேலதிகமாக மூன்று நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
18,000 சிங்கப்பூர் டொலர் மோசடி
கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ், தனது வங்கி உள்நுழைவு விவரங்களை தெரியாத ஒருவருக்கு சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்குத் தூண்டியதற்காக, ராஜாதி ராஜசிங்க மனமேந்திர படபடிலகே விஷ்வா மாதவி (Rajadi Rajasinghe Manamendra Patabadilage Vishwa Madavi) மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த செப்டம்பர் 17 அன்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கணக்கு கிட்டத்தட்ட 18,000 சிங்கப்பூர் டொலர் மோசடி வருமானத்தை ஈட்டப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.