வெனிசுலா விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
வெனிசுலா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தியது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற விசே ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, அனைத்து நாடுகளினதும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியமானதாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பில் நாளை (5) நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐநா சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை முரணாக செயற்படுகின்றமை தொடர்பில் ஐநா பொதுச்சபையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.