சர்வதேச கடற்பரப்பில் விபத்து ; இலங்கை கடற்றொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு
கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற IMUL-A-0066-MTR எனும் பல நாள் மீன்பிடிக் கலன், மாலைதீவுக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இன்று (29) அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான படகு, நீரோட்டத்தின் வழியே இந்தோனேசிய கடல் எல்லை வரை அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அதில் தப்பிய நான்கு கடற்றொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடலில் விபத்து
ஆறு கடற்றொழிலாளர்களுடன் பயணித்த இந்தப் படகு, ஒக்டோபர் 16 ஆம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், விபத்தின்போது ஒரு கடற்றொழிலாளர் காணாமல் போயுள்ளார்.
அத்துடன் படகின் மேல் தளத்தில் இருந்த ஐவரில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது. கவிழ்ந்த படகின் மீது இருந்த நான்கு கடற்றொழிலாளர்களும் இந்தோனேசிய மீன்பிடிக் கலன் ஒன்றினால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூலமாகவே இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், அருகில் உள்ள வர்த்தகக் கப்பல் ஒன்றுக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கருத்துத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சுசந்த கஹவத்த, "மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் 300 கடல் மைல்கள் தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளதால், பயணத்திற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனாலும், கூடிய விரைவில் இந்த கடற்றொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்," எனக் குறிப்பிட்டார்.