31 இந்தியர்களுக்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

சிறைத் தண்டனை
இவர்கள் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு இன்று (17) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழக மீனவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர்.
இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்த ஏனைய 28 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதுவும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10 வருட காலப்பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்படும் காலப்பகுதியில் விதிக்கப்படும் தண்டனையுடன், 18 மாத சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படகின் உரிமையாளர்களுக்கு படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 31 மீனவர்களும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஊடாக மீரிகம முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.