இலங்கையில் பெளத்த பிக்குகள் தொடர்பில் கவலையை வெளியிட்ட முக்கிய அமைச்சர்
நாட்டில் பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டுக்குள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹரக பகுதியில் நேற்று (24-12-2022) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார ரீதியில் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை சடுதியாக தீவிரமடைந்துள்ளது.
இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.
இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் முழுமையாக கேள்விக்குள்ளாகும். ஒரு நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் போது அந்த நாட்டில் சட்டம் மற்றும் அடிப்படை ஒழுக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் தலைதூக்கும்.இலங்கையிலும் தற்போது அவ்வாறான தன்மை காணப்படுகிறது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உணர்வுபூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். திட்டமிட்ட வகையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை இல்லாதொழிக்க 09 மாகாணங்களிலும் விசேட போதைப்பொருள் செயலணியை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார்.