அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அதிரடி வெற்றி
மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் 20-வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மாபெரும் வெற்றி
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், அணித்தலைவர் கேபி லெவிஸ் பொறுப்புடன் விளையாடி 50 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலிஸ் டெக்டர் 28 ஓட்டங்கள் சேர்க்க, அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.
131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு, அணித்தலைவர் சமரி அதபத்து அதிரடியான தொடக்கம் தந்தார்.
ஆரம்பம் முதலே அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
தொழிலதிபர் திருமணத்திற்காக அரண்மனை, சொகுசு விமானங்கள் ; போட்டோ-ஷூட்டில் வருங்கால மனைவி கொடுத்த ட்விஸ்ட்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரி அதபத்து, 58 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 61 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 106 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவருக்கு துணையாக இமேஷா துலானி 20 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை மகளிர் அணி 15.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 134 ஓட்டங்கள் எடுத்து, 27 பந்துகள் மீதமிருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.