ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் ஜீ.எல்.பீரிஸ் கவலை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டின் (Michelle Bachelet) அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகளும், பலவீனங்களும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை மூன்று தேர்தல்களில் தொடர்ந்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்துள்ளார்.
ஏனைய உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையில் பாகுபாட்டை காட்டுவது, ஐக்கிய நாடுகள் சபையின் அடித்தளத்தையே தாக்கும் செயல். அத்துடன் இது நாடுகளின் இறையாண்மை, சமத்துவம் தொடர்பான கொள்கைகளை மீறுகிறது.
பேரவை மீதான நம்பிக்கையை குறையாமல் தக்கவைத்துக் கொள்வது அவசியம். ஆகவே இலங்கையின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் மேலோட்டமான முடிவுகள், அறிக்கையில் இடம்பெற்றிருப்பது ஆழ்ந்த வருத்தததுக்குரியது.
இருப்பினும், இலங்கை அரசாங்கம், மீட்டெடுத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், சமமான முறையில் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் உறுதியாக தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) மேலும் தெரிவித்துள்ளார்.