கைதிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் திட்டம் ; கிடைக்கப்பெற்ற அனுமதி
சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழிமுறையாக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (4) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

சட்ட ஏற்பாடுகள்
குறித்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடுப்புக் காவலில் வைத்தல் அல்லது சிறைப்படுத்தல் போன்றவற்றுக்கு மாற்று வழிமுறையாக பொருத்தமான வழக்கு நடவடிக்கைகளில் சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக அப்போதைய அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டமூலம் ஒன்றைத் தயாரிக்குமாறு செயன்முறையை சட்டவரைஞர் ஆரம்பித்துள்ளார்.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் மீளாய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு 2025.06.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு மேலும் உட்சேர்க்கப்படவேண்டிய ஏற்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த ஏற்பாடுகளை உட்சேர்த்து இச்சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்யுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.