இந்த தருணத்தில் இதெல்லாம் தேவையற்ற விடயங்கள்! ரணில் வெளியிட்ட தகவல்
அரசாங்கங்களை மாற்றுவதோ தேசிய அரசாங்கங்களை அமைப்பதோ இந்த தருணத்தில் தேவையற்ற விடயங்கள் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளிற்கு நிரந்தர தீர்வை காண்பதை நோக்கிய பொதுவான கருத்துடன்பாட்டை உருவாக்குவதற்கு அரசியல் கட்சிகள் முயலவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (13-03-2022) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வில் கருத்து வெளியிட்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்தது,
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உறுதியான பொருளாதார கட்டமைப்பிற்கு இணங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து மீள்வது எவ்வாறு என்பது குறித்த தேசிய கருத்தொருமைப்பாடு ஏற்படவேண்டும்.
தற்போது தேவையானது தேசிய அரசாங்கம் இல்லை, என தெரிவித்துள்ள அவர் நாங்கள் அமைச்சரவை பதவிகளை எங்களிற்குள் பிரித்துக்கொள்கின்றோம் என மக்கள் தெரிவிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவசியமான தேசிய கருத்தொருமைப்பாடே எனவும் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் எதிரணியில் தொடரலாம் அரசாங்கம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான தேசிய இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும், அவர்கள் ஒருவருடம் இரண்டு வருடம் நீடிக்கின்ற இணக்கப்பாட்டை காணக்கூடாது 15 முதல் 20 வருடங்கள் நீடிக்கின்ற இணக்கப்பாட்டினை காணவேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்தொருமைப்பாடு ஏற்பட்டவுடன் அரசாங்கமும் எதிர்கட்சியும் தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கலாம், முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்து கூட ஆராயலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேசிய கட்டமைப்பையும் அடிப்படை கொள்கைகளையும் மாற்ற முடியாது எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக இலங்கையை ஆண்டவர்கள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டதும், தேசிய கொள்கைகளாக விளங்கியிருக்கவேண்டியவற்றை மாற்றியதுமே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.