புதிய அமைச்சராக பதிவியேற்றுக்கொண்ட நிமல் சிறிபால வெளியிட்ட தகவல்!
நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு கைக்கொடுப்பது, அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு உதவுதல் போன்ற விடயங்களை மேற்கொள்வது எனது அரசியல் சிந்தனை அல்ல என துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா (Nimal Sriripala De Silva) தெரிவித்துள்ளார்.
தனது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் உறவினர்களுக்கு அரசியல் ரீதியாக கைக்கொடுத்ததில்லை என்றும் எந்தவொரு கூட்டுறவு திணைக்களத்திலும் தலைவர்மாரை நியமித்ததில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்லா மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையில் காணப்படும் ஒவ்வொரு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், துறைமுக சபை அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் அமைச்சில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
"நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாக பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் இந்த சூழ்நிலையில், உண்மையான மக்கள் தலைவனாக மக்கள் படும் துன்பங்களை கண்டும் காணாமல் இருப்பதற்கு என்னால் இருக்க முடியாது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது இன்று நேற்று காணப்பட்ட பிரச்சினை அல்ல. இந்நிலைமைக்கு கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கங்களினதும் கொள்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்த விதங்களும் முக்கிய காரணியாகும்.
எவ்வாறாயினும் கடந்த காலத்தை பேசிப் பயனில்லை என்றாலும், எந்த விதத்திலாவது செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்புவதே தற்போதைய தேவையாகும்.
நாட்டை நேசிக்கும் தொழிலாளர் படையால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்புவதற்கு முடியும். அவர்கள் நாட்டுக்காக திறமையாகவும், வினைத் திறனுடனும் வேலை செய்வது கட்டாயத் தேவையாகும்.
அத்துடன், அவர்களது தேவைகள் அறிந்து அவர்களின் குறைகளை கண்டறிந்து அவர்களது பிரச்சினைகளை தீர்வு வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். அவர்களுடன் ஒன்றித்து வேலை செய்வதை நான் எதிர்பார்த்துள்ளேன்.
நாட்டில் உள்ள சகல அரச நிறுவனங்களிலும் வீண் விரயம் ஏற்படுத்தப்படுவதாகவும், இலஞ்சம், ஊழல் மோசடிகள் நடைபெறுவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
இவ்வாறான மோசடி வேலைகள் நடைபெறும் சந்தர்பங்களை தனிப்பட்ட ரீதியில் எனக்கு அறியத்தருமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
எமது வேலைத்திட்டங்களை திறம்பட முன்னேற்றிச் செல்வதற்கு சகல தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்" என்றார்.