இந்தியாவை குறைந்த ஓட்டங்களில் சுருட்டிய இலங்கை அணி! அபார பந்துவீச்சி
தொடரின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் 3வது ரீ-20 போட்டியில் இந்திய அணியை 81 ஓட்டங்களுக்குள் சுருட்டியது இலங்கை அணி.
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான 3வதும் இறுதியுமான ரீ-20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.
இலங்கை அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சி மற்றும் இறுக்கமான களத்தடுப்பு மூலம் இந்திய அணி மிகக் குறைவான ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும், புவனேஸ்குமார் 16 ஓட்டங்களையும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கெய்க்வாட்-14 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவரும் மூத்த அனுபவ வீரருமான ஷிகர் தவாண் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து வெளியேறினார்.
அத்துடன் மேலும் இரு வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்திருந்ததுடன் நான்கு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.
பந்துவீச்சில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி வீரர்களுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கிய வனிண்டு ஹசரங்க 4 ஓவர்களில் 15 ஓட்டமற்ற பந்துகள் உட்பட 9 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
சர்வதேச ரீ-20 வரலாற்றில் இந்திய அணி பெற்றுக்கொண்ட 3வது மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி இலைக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.