சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு இலங்கை உதவி ; கப்பலுக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான் 6' (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கடற்படை முன்வந்துள்ளது.
இருப்பினும், குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் இருந்த இக்கப்பலில், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக விடுக்கப்பட்ட அபாய சமிக்ஞையை அடுத்து இலங்கை கடற்படை விரைந்து செயற்பட்டது.

கடற்படையினர் குறித்த நோயாளியை நாட்டின் கடல் எல்லைக்கு அருகில் வைத்து பொறுப்பேற்று, காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த போதிலும், இம்முறை இலங்கையில் நங்கூரமிடுவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் சீனா முன்வைக்கவில்லை எனத் தெரியவருகிறது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற 'டொக்டர் ஃபிரிட்ஜோஃப் நான்சன்' (Dr Fridtjof Nansen) கப்பலுக்கு மாத்திரம் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ள விசேட அனுமதி வழங்கப்பட்டது.
வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களின் வருகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய நிலையான நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் தற்போது இறுதி செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.