நெருக்கடியைப்போக்க இலங்கைக்கு வாரி வழங்கிய நலன் விரும்பிகள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப்போக்க அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 51,988 அமெரிக்க டொலர்கள், 14,508 ஸ்டெர்லிங் பவுண்ட்கள், 4253 யூரோக்கள் மற்றும் 11,646 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பன நலன் விரும்பிகளிடமிருந்து பெற்றுள்ளது.
அண்மையில் இலங்கை மத்திய வங்கி, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள நலன் விரும்பிகளிடமிருந்து அந்நிய செலாவணியைப் பெறுவதற்காக கணக்குகளை ஆரம்பித்தது.
அதற்கமைய, இவ்வாறு வழங்கப்படும் அனைத்து வெளிநாட்டு நாணய நன்கொடைகளும் மருந்து, எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என மத்திய வங்கி உறுதியளிக்கிறது.
மேலும் பற்றுச்சீட்டுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நன்கொடைகளைப் பயன்படுத்தும் விதம் என்பவற்றை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி ஆளுநரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.