யாழிலிருந்து அகதிகளாக தமிழக கடற்கரைக்கு வந்த மூவர்!
இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் வாழ வழியின்றி அப்பாவி மக்கள் அபயம் தேடி அகதிகளாக இந்தியாவிற்கு வருவது தொடர்ந்து வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து இதுவரை 253 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.
இதேவேளை, யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயன் (46), அவரது மனைவி ரஜினி (45), மகள் பெந்தினி (18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 ஆண், 2 பெண்கள், உட்பட 3 பேர் அகதிகளாக இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் (25-05-2023) யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு மன்னார் பேசாலகக்கு வந்து அங்கிருந்து இரவு 08.00 மணியளவில் புறப்பட்டு நள்ளிரவு 02.00 மணிக்கு தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அப்பகுதிக்கு ரோந்துசென்ற ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் 3 பேரையும் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாணை செய்து வருகின்றனர்.