மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்திற்குள் திடீரென முளைத்த இராணுவ முகாம்?
மட்டக்களப்பு மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் விமானப்படைக்கு சொந்தமான இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை மற்றும் முருகன் கோயில், கத்தோலிக்க தேவாலயம் உட்பட மதஸ்தளங்களும் காணப்படுகின்றன.
இலங்கையில் வரலாற்று ரீதியாக குறித்த பிரதேசம் பறவைகள் சரணாலயமாக உள்ள நிலையில் குறித்த பிரதேசத்தில் திடீரென இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாந்தீவு பிரதேசத்திற்குள் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு நின்ற இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதோடு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி எடுத்து வருமாறும் பணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இதுவரை காலமும் சுகாதார அமைச்சுக்கு சொந்தமாக இருந்து வந்த மாந்தீவு பிரதேசம் எப்போது பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டது என்ற விடயம் யாருக்கும் தெரியாத நிலையில் அங்கு விமானப்படைக்கு சொந்தமான இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று தற்காலிகமாக இயங்கி வருவதாகவும் நிரந்தர இராணுவ முகாம் ஒன்றுக்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான எந்த உத்தியோக பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த பிரதேசத்தில் விமாப்படை முகாம் அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்து வந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
