புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவைகள்
இலங்கையில் சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில் சேவைகள் விபரம்
வெள்ளிக்கிழமை (11) இரவு 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதோடு அதே குறிப்பிட்ட நேரத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
வெள்ளிக்கிழமை (11) இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதே நேரத்தில் காலியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
வெள்ளிக்கிழமை (11) காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (18) மீண்டும் திரும்பும்.
இந்த 10 சிறப்பு ரயில்களும் நீண்ட வார விடுமுறை நாட்களில் 31 பயணங்களை மேற்கொள்ளும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
பேருந்து சேவைகள்
இதேவேளை, ஊர்களுக்குச் செல்லும் மக்களின் தேவைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரின் அத்துகொரல தெரிவித்தார்.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் துணைப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.