வதந்திகளை நம்ப வேண்டாம் ; பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு
வெளிநாட்டுப் பயணங்களுக்கு சிறப்பு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பதற்றத்தால் ஒரு வருடத்திற்கு பொது மக்கள் தங்கம் வாங்குவது மற்றும் வீண் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து அத்தியாவசியமின்றி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோருக்கு சிறப்பு வரி அல்லது செஸ் வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் பரவியது.
இந்நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில்,
வெளிநாட்டுப் பயணங்களுக்கு சிறப்பு வரி அல்லது செஸ் வரி விதிக்கப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும் தொழில் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கவே மத்திய அரசு முயன்று வரும் நிலையில், இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.