சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர ஊடகங்களிடம் தெரிவித்தார்.
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து கணிசமாக அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, மேலதிக போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள், பிரதான பஸ் நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்களை மையப்படுத்தி விசேட போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த விசேட பாதுகாப்புத் திட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் பொதுமக்கள் மீண்டும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குத் திரும்பும் வரை இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர மேலும் கூறினார்.