உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு
2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனுமதி அட்டைகள்
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், மேற்கூறிய இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம், 011-2784208 அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.