சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு கிடைத்த பாராட்டு
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை எட்டியுள்ள பொருளாதார வளர்ச்சி இலக்குகள், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்தியமை ஆகியவற்றை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

பொருளாதார வளர்ச்சிகள்
விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மறு ஆய்வுகளின் தற்போதைய நிலை குறித்தும், அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மத்திய கிழக்கு போர் சூழலினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மற்றும் மின்சக்தி விநியோக பாதிப்புகளை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜோர்ஜியு உள்ளிட்ட பிரதிநிதிகளும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வெளியூர் சவால்களுக்கு மத்தியிலும் எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணிச் செல்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.