சமூக ஊடக விளம்பரங்களால் இலங்கை இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான விளம்பரங்களும் வழிகாட்டுதல்களுமே இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முன்னர் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் ஊடாகவே போதைப்பொருள் பழக்கம் பரவியிருந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் இடம்பெறும் தவறான பிரசாரங்களே இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

போதைப்பொருட்களின் விலை
இலங்கையில் தற்போது இரசாயன முறையில் தயாரிக்கப்படும் செயற்கை போதைப்பொருட்களின் (Synthetic Drugs) பயன்பாடு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செயற்கை போதைப்பொருட்களின் விலை உயர்வால், ஒரு நாளில் இருமுறை போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவருக்கு சுமார் 8,000 ரூபா வரை செலவாகின்றது.
இதன்படி மாதத்திற்கு சுமார் 240,000 ரூபா தேவைப்படுவதால், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்தல், பெண்களின் நகைகளைத் திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப் பாகங்களைத் திருடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், போதைப்பொருள் பாவனை குடும்ப வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களையும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக எச்சரித்த அஜித் ரொஹன, இதனால் எப்போது வேண்டுமானாலும் பாரிய சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளுடன், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.