யாழில் 35 வருடங்களின் பின் அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதி; மக்கள் மகிழ்ச்சி
35 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்று (27) முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.
35 வருடம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இராஜ இராஜேஸ்வரி அம்மன்
கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு (தற்போதும் ஆலயத்திற்கு மட்டும் செல்லவே அனுமதி) கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்தனர்.
எனினும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்
அதேவேளை யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார , வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகனை நேற்றைய தினம் சந்தித்தார்.
இதன் போது, விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரி விடுத்தமை குறிப்பிடத்தக்கது.