இலங்கைக்கு கடத்துவதற்கு தயாரான முக்கிய பொருட்களுடன் இராமேஸ்வரத்தில் அறுவர் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் காரில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணத்தால் அண்மைக் காலமாக ராமேஸ்வரம் கடல் மார்க்கமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பிடி இலைகள், தங்கம், ஏலக்காய், சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றது.
அவ்வாறு நேற்றையதினம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ராமேஸ்வரம் துறைமுக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரை பகுதியில் உள்ள தனியார் மின் கம்பெனி அருகாமையில் சந்தேகப்படும்படி கார் ஒன்று நின்றுள்ளது.
அந்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது காரில் மனித உடலுக்கு , தீங்கு விளைவிக்கும் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.
காரில் இருந்த 70 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ராமேஸ்வரம் துறைமுக பொலிஸார், இது தொடர்பாக தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.