இரவில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு ; பலியான தம்பதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்தனர்.
குறித்த தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்
இந்தநிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒரவரின் நெருங்கிய உறவினர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்டியாகொட - கிரலகஹவெல பகுதியில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தங்காலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவரும் 68, 59 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் செலுத்தி வந்த உந்துருளி நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சீனிமோதர மற்றும் தங்காலையில் மூன்று பாரவூர்தியிலிருந்து பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உனகுருவ சாந்தவிற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் போதைப்பொருள் தொடர்பான தகராறின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்திய தரப்பினர் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.