தென்னிலங்கையை அதிரவைக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
நீர்கொழும்பு, குட்டுதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு, குட்டுதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவருக்கும் பாதிப்பில்லை
துப்பாக்கிச் சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் ஜன்னல் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை தென்னிலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றசெயல்களை தடுக்கும் முகமாக பொலிஸார் தீவிர சுற்றிவளைப்பு நடவைக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
பாணந்துறை விற்பனை நிலையம் மீது துப்பாக்கிச் சூடு
அதேவேளை இன்று (06) காலை பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், துப்பாக்கிச் சூடு நடந்தபோது விற்பனை நிலையத்தில் ஒரு பெண் இருந்தபோதிலும், துப்பாக்கித் தாக்குதல் விற்பனை நிலையத்தின் குளிர்சாதனப் பெட்டியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.