பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களில் வேட்பாளர்கள் பங்குபற்றுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயற்பாடாகும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டங்களை அரச அலுவலர்கள் ஊடாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நிவாரண திட்டங்கள் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் சமூகத்தில் எழுந்தால், இந்த நல்லெண்ணப் பணிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு (Dinesh Gunawardena) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், அரசின் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் செயல்படுவதை பாராட்டுகிறோம்.

ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்கக் கூடாது.
அவ்வாறிருக்கையில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்க இத்தகைய ஆதரவைப் பயன்படுத்துவது நெறிமுறையற்றது.
மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரதிநிதிகள் அல்லது வேட்பாளர்கள் உதவி வழங்கும் நடவடிக்கையில் பங்களிப்பது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.