வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞனின் வாழ்வை மாற்றிய சம்பவம் ; சகோதரர்களின் மரணத்தால் தவிக்கும் குடும்பம்
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
புத்தளம், தில்லையடி - உமராபாத் பகுதியைச் சேர்ந்த ரம்ஸான் பாத்திமா ரிஸ்கானா (வயது 17), ரம்ஸான் பாத்திமா ஸஹ்ரா (வயது 19) மற்றும் அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரரான இஸ்மத் முஹம்மது உஸாம் (வயது 25) ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிள்ளைகளான இரண்டு இளம் சகோதரிகளும், உயிரிழந்தவர்களின் தாயின் இளைய சகோதரியின் மகனான 25 வயதுடைய இளைஞனுமே இந்தத் துயரச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிப்பதற்காகச் நேற்று (06) மாலை 3 மணியளவில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் நுரைச்சோலை - தளுவ முகத்துவாரத்திற்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தமிழ் அமைச்சர் எதிர்ப்பு; நாக விகாரைக்குள் ஒளிக்கப்பட்ட சிலை ; பகீர் தகவல்
சம்பவம் இடம்பெற்ற போது, தளுவ முகத்துவாரத்தில் மாலைப் பொழுதில் இரண்டு சகோதரிகளும் அருகருகே நீராடி மகிழ்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் வீசிய பலத்த காற்று மற்றும் கடும் நீரோட்டம் காரணமாக, அந்த இரண்டு சகோதரிகளையும் நீர் இழுத்துச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இரண்டு சகோதரிகளையும் கடல் நீர் இழுத்துச் செல்வதைக் கண்ட சகோதரர், அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் பாய்ந்துள்ளார். எனினும், இரண்டு சகோதரிகளும் நீருக்குள் மூழ்கிய நிலையில், அவர்களைக் காப்பாற்ற முயன்ற அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கி உயிருக்காகப் போராடியுள்ளார்.
அதனையடுத்து அவரைக் காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனின் தந்தை முழுமையாக முயற்சி எடுத்தபோதிலும், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. குடும்பத்தினர் கண் முன்னேயே இரண்டு சகோதரிகளும் அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்த சிலரின் உதவியுடன் கடல் நீருக்குள் மூழ்கிய இளம் யுவதிகள் இருவரும் இளைஞரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் குதித்து உயிரிழந்த இளைஞரான சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததுடன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக விடுமுறையில் நாட்டுக்கு வருகை தந்திருந்தார் என்றும், இம்மாதம் 26 ஆம் திகதி மீண்டும் தொழில் நிமித்தம் சிங்கப்பூருக்குச் செல்லவிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ரம்ஸான் பாத்திமா ரிஸ்கானா என்பவர் தில்லையடி - அல்ஜித்தாவில் இயங்கி வரும் பெண்கள் அரபு மதரஸா ஒன்றில் கல்வி கற்று, பட்டமளிப்பு விழாவுக்காகக் காத்திருந்தார் என்றும், அவரது சகோதரியான ரம்ஸான் பாத்திமா ஸஹ்ரா எனும் மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டுப் பெறுபேற்றுக்காகக் காத்திருந்தார் எனவும் குடும்ப உறவினர்கள் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரிகள் மற்றும் இளைஞன் ஆகியோரது மரணம் முழுப் புத்தளம் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.